ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்; தொடர் புகார்களால் ஆட்சியர் அதிரடி...
காஞ்சிபுரம்
ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளால் மக்கள் நிறைய இடர்பாடுகளை சந்திப்பதாக அடிக்கடி புகார்கள் வந்ததையடுத்து ஆட்சியரின் அதிரடி உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன.
தமிழக - ஆந்திர எல்லை
ஊத்துக்கோட்டை நகரம் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளதால் முப்பதுக்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களைச் சேர்ந்தவர்களும், இருபதுக்கும் மேற்பட்ட ஆந்திர கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கூடும் இடமாக இது உள்ளது.
மேலும், இங்கு பல்வேறு வணிக வளாகங்கள், நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம், பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் என அனைத்துமே நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளன.
புகார்
எனவே, எப்போதும் நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில், பல்வேறு ஆக்கிரமிப்புகளினால், நெடுஞ்சாலையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆட்சியரிடம் தொடர் புகார்கள் கொடுத்து வந்தனர்.
அகற்றும் பணி
இதனைத் தொடர்ந்து, ஆட்சியரின் அதிரடி உத்தரவின் பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பங்கேற்பு
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, வட்டாட்சியர் கிருபா உஷா, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலச்சந்தர், பேரூராட்சி செயல் அலுவலர் தன்ராஜ் ஆகியோரின் முன்னிலையில் நடந்தது.
பாதுகாப்பு பணி
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது ஏதேனும் எதிர்ப்புகள் கிளம்ப வாய்ப்புள்ளதை அறிந்து முன்கூட்டியே டிஎஸ்பி சரவணகுமார், ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் காவலாளார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.