Relatives and political parties fight for the relief of the family of the farmer who died and died ...
புதுக்கோட்டை
மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு நிவாரணம் கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சி அணவயல் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். விவசாயியான் இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி தனது தோட்டத்தில் பலாப்பழம் பறிக்க ஏணி வைத்து மரத்தில் ஏறியபோது அந்த வழியாக தாழ்வாக செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் மரத்தில் உரசியதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து வடகாடு காவலாளர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தமிழ்செல்வன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி தமிழ்செல்வன் குடும்பத்திற்கு ரூ.20 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று புளிச்சங்காடு கைக்காட்டியில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜசேகரன், புஸ்பராஜ், முன்னாள் எம்.பி.ராஜாபரமசிவம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன்,
முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் திருஞானம், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலம், பொதுமக்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
காத்திருப்பு போராட்டத்தின் இறுதியில் விவசாயி தமிழ்செல்வன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
