விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார், விஜய் பரிட்சை எழுதட்டும் அவர் பாஸ் ஆவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளத்தில் உள்ள முத்தீஸ்வரர் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் "ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்க்காக திமுக 525 வாக்குறுதிகளை அளித்தது, நிறைவேற்ற முடியாத மக்களின் ஆசையை தூண்டும் விதமாக திமுக வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது, தமிழகத்தின் உண்மையான நிலவரத்தை திமுக அரசு மறைத்து வருகிறது, பங்காளி சண்டை, பகையாளி தடுப்பதற்காகத்தான் திமுக உள்ளதா?, தமிழக மக்களின் முதுகெலும்பை உடைத்து விட்டு தலை குனிய விடமாட்டேன் என்பது என்ன சொல்வது சரிதானா?,
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சல்லி காசை கூட திமுக பெற்றுத் தரவில்லை, திமுகவிற்கு தேவை என்றால் பிரதமருக்கு வெண்குடை பிடிப்பதும், தேவை இல்லை என்றால் கருப்பு பலூன் பறக்க விடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. மத்திய அரசுடன் இணைந்து திமுக தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மக்களிடம் பச்சைப் பொய் சொல்வதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வல்லவராக உள்ளார், அனுபவம், வலிமை கொள்கைத் தெளிவோடு 75 வது ஆண்டை கொண்டாடும் திமுக மத்திய அரசுடன் இணைந்து திட்டங்களை செய்ய முடியவில்லை.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் மக்களிடம் அவர்கள் ஆதரவை கேட்கலாம், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தியாக வரலாறு உள்ளது, தியாக வரலாற்றுடன் அதிமுக தேர்தல் களத்தை சந்திக்கிறது. அதனால் தான் அதிமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. விஜய் பரிட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் என சொல்கிறார். விஜய் பரிட்சை எழுதட்டும் அவர் பாஸ் ஆவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் களத்தில் விஜய் தற்போது தான் படித்துக் கொண்டிருக்கிறார்.
திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார். தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு மாற்று அதிமுக. அதிமுகவிற்கு மாற்று திமுக என்பது காலம் காலமாக உள்ள வரலாறு. அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்தும் சக்தியாக உள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பேசலாம் ஆகவே விஜய் பேசுவதில் தவறில்லை. எம்ஜிஆரை பேசாமல் யாரும் பொது வாழ்க்கையை தொடர முடியாது. அதிமுக பாஜக கூட்டணியில் டெல்லியில் எடுக்க வேண்டிய இறுதி முடிவுகளை அமித்ஷா எடுப்பார்.
தமிழகத்தில் எடுக்க வேண்டிய முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுப்பார், எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவுடன் என்ன பேசினார் என்பதை ஊடகத்திற்கு முன்பாக மிகத் தெளிவாக கூறிவிட்டார். அமித்ஷாவுடன் பேசியது எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஆண்டவனுக்கும் தெரியும். முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கடை திறப்பு விழாவின் போது கூட்டம் கூடுகிறது. எல்லா நேரத்திலும் தலைமை ஆசிரியர் பதில் சொல்ல முடியாது. திமுகவை எதிர்ப்பதில் தலைமையாசிரியர் எடப்பாடி பழனிசாமி" என பேசினார்.
