ரேஷன் கார்டுகளில் மீண்டும் உள்தாள்….செல்லத்தக்க காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழத்தை பொறுத்தவரை கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.. இந்த ரேஷன் கார்டுகள் கடந்த 2009ம் ஆண்டுடன் காலாவதியாகிவிட்டன. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டி பழைய கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ரேஷன் கார்டுகள் தான் தற்போதும் புழக்கத்தில் உள்ளன. முகவரி மாற்றம், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட காரணத்தால் ரேஷன் கார்டுகள் கந்தலாக மாறிவிட்டன. இது தவிர போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால் பொது வினியோக திட்டத்திற்கு அரசு வழங்கும் மானியத்தால் பல கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆதார் கார்டு பெற்றவர்களிடம் நேரடியாக பதிவு செய்து ஏடிஎம் கார்டு அளவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது.இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது 60 சதவீத அளவிற்குதான் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் முடிவடைந்த பின்னர்தான் ஸ்மார்ட் வழங்க முடியும் என்பதால் இந்த ஆண்டும் ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்ட அரசு முடிவு செய்தது.
அதன்படி தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஜன., 1 முதல், டிச., 31 வரை நீட்டிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து உள்காள் ஒட்டும் பணிகள் தொடங்கவுள்ளன.

உள்தாள்கள், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம், வழங்கப்படும். அதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டில், '2017க்கான உள்தாளை பெற்றுக் கொண்டேன்' என்ற முத்திரையிட்டு, அதன் கீழே ரேஷன் கார்டுதாரரின் கையொப்பம், இடது கை பெருவிரல் ரேகை பெறப்படும். என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.