சிவாஜி கணேசனின் வீடானது பிரபுவின் பெயரில் இருக்கிறது என்றும், அதில் தனக்கு பங்கு இல்லை என்றும் ராம்குமார் கூறிய நிலையில் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

சிவாஜி வீடு ஜப்தி : தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இவருக்கு ராம்குமார் மற்றும் பிரபு ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ராம்குமாரின் மகனும் சிவாஜியின் பேரன் தான் நடிகர் துஷ்யந்த், இவர், தனது மனைவி அபிராமியோடு இணைந்து ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளனர்.

Breaking : சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

படம் தயாரிக்க கடன்

இந்த கடனை உரிய வகையில் செலுத்தவில்லையென கூறப்படுகிறது. இதனால் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என தனபாக்கியம் நிறுவனம் தெரிவித்தது. அல்லது அதற்கு இணையாக ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்து உரிமைகளையும் துஷ்யந்த் வழங்காத நிலையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

சிவாஜி வீடு ஜப்தி செய்ய உத்தவு

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி அப்துல் குத்தூஸ், போதுமான அவகாசம் வழங்கியும் பதில்மனு தாக்கல் செய்யாததால், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து சிவாஜி வீடு ஜப்தி தொடர்பான செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகர் துஷ்யந்தின் தந்தையான ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது முறையீடப்பட்டது. அப்போது சிவாஜி கணேசனின் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லையெனவும், தனது சகோதரர் நடிகர் பிரபு பெயரில் தான் வீடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ராம்குமார் முறையீடு

இது சம்பந்தமாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி, உரிமையாளராக இல்லாவிட்டால் எப்படி ஜப்தி செய்ய முடியும் எனக் கூறி, ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்ததுடன், பதில் மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த பிரச்சனையை தீர்வு காண முயற்சிக்கும்படி அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.