இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, வழிமறித்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 43 மீனவர்களுடன், 6 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர். அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைதுக்கு மீனவ சங்கங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த நிலையில் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். தலைமன்னார்- தனுஷ்கோடி இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்குவந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றி வளைத்து 12 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் சிறை பிடித்து இழுத்துச் சென்றனர். இதையடுத்து 12 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து 55 மீனவர்கள், 8 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது மீனவ குடும்பத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மீனவர்களை விடுவிக்கக்கோரி மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சந்தித்ததாகவும், அவர்களுக்கு பாஜக சார்பில் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மேலும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், இந்தியத் தூதரகத்தின் துரித முயற்சியால் விரைவில் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.