கிருஷ்ணஜெயந்தி அன்று செயற்கை இலையில் குழந்தைகளை கட்டி வைத்து ஊர்வலம் போலீசார் வழக்கு பதிவு; குழந்தைகள் உரிமை ஆணையம் நோட்டீஸ்
கிருஷ்ணஜெயந்தி அன்று கேரளாவின் பையனூர், கன்னூரில் குழந்தைகளை செயற்கை இழையில் கட்டிவைத்து ஊர்வலம் அழைத்து வந்தது தொடர்பாக போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
மேலும், குழந்தைகள் உரிமைகள் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 12-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது கேரளாவின் கன்னூர் மாவட்டம், பையனூரில் 5 வயதுக்கும் குறைவான ஒரு குழந்தைக்கு கிருஷ்ணர் போல் வேடம் அணிவிக்கப்பட்டு, மிகப்பெரிய செயற்கை இழையில் கட்டி வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்தது.
அதேபோல, பையனூரிலும் 3 வயது குழந்தையை இதுபோல் கிருஷ்ணர் வேடமிட்டு, இலைமீது படுக்கவைத்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இது தொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்களை ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். ஊர்வலம் அழைத்து வந்தபோது, அந்த குழந்தைகளுக்கு இயற்கை உபாதைகள் கழிக்கவோ, குடிநீர் கொடுக்கப்படவும் இல்லை என புகார் கூறப்பட்டது. இந்த ஊர்வலத்தை சங்பரிவார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிசத் அமைப்புகள் ஏற்பாடு செய்து இருந்தன.
இது குறித்து வௌியான புகைப்படங்களைப் பார்த்த மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. இது தொடர்பாக உள்துறை செயலாளர், மாநில போலீஸ் தலைவர், மாவட்ட கலெக்டர், மாவட்டபோலீஸ் எஸ்.பி., குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் விளக்கம் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியது.
மேலும், இலையில் குழந்தைகளை கட்டிவைத்து ஊர்வலம் அழைத்து வந்தது குறித்து , பையனூர் போலீசாரிடமும், தளிப்பரம்பா போலீசாரிடம் தனித்தனியாக மார்க்சிக்ஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலசங்கம் என்பவர் புகார் அளித்து இருந்தார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.