"ரஜினி தமிழக முதல்வராக வேண்டும்" - தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!!
வறட்சி அகன்று மழை பொழிய வேண்டும் என்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களும், பாபாஜி பக்தர்களும் இணைந்து பழமுதிர்சோலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்தனர்.
தென் மாவட்டங்களில் மழை பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வறட்சி காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வறட்சியில் இருந்து விடுபட வேண்டி, ரஜினி ரசிகர்கள் முருகனை வேண்டி, மதுரை அழகர் கோயிலிலுள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்தனர்.
நடிகர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகி சுப்புராஜ், தலைமையில் ரஜினி ரசிகர்கள் அழகர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள், ரஜினி வணங்கும் பாபாஜியின் படத்தை வைத்து பூஜை செய்தனர்.
பின்பு நடிகர் ரஜினிகாந்த் பெயரிலும் சிறப்பு பூஜை செய்தார்கள். அதன் பின்பு தங்கத்தேரை கோயில் வளாகத்தில் இழுத்துச் சென்றார்கள். நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்கத்தேர் இழுத்துச் செல்லப்பட்டது குறித்து வந்திருந்த ரசிகர்கள் கூறும்போது, மழை வேண்டி பூஜை செய்ததாக சொல்லப்பட்டாலும், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்றும், அவர் தமிழக முதலமைச்சராக வேண்டும் என்பதற்காகவே இந்த வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதாக கூறினர்.