இனி ஆவின் பால் பொருட்கள் வீடு தேடி வரும் - ஆன்லைனிலேயே புக் செய்யலாம்!!
சென்னை, நந்தனம் ஆவின் பாலகம் கூட்டாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஆவின் புதிய பால் பொருட்களான ரசகுல்லா, பாக்கெட் தயிர் ஆகியவை விற்பனைக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். அது மட்டுமல்லாது வீடு தேடி வரும் ஆவின் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம், பால் மற்றும் பால் பொருட்களை, நுகர்வோர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து, இலவச டோர் டெலிவரி சேவை செய்து கொள்ளலாம். இந்த சேவை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கப்பட உள்ளது.
ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறித்து தொலைப்பேசி எண் 1800 425 3300 என்ற எண்ணிலும், aavincomplaints@gmail.com என்ற இணையதளத்திலும் நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கலாம்.
திட்டத்தை துவக்கி வைத்தப்பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஆவின் பால் எந்தவிதமான ரசாயன கலவை இல்லாதவை. வீடு தேடி வரும் ஆவின் திடடம், சென்னை முழுக்க 9 இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆவின் தயாரிப்புகளில் எதிலும் கலப்படம் இல்லை. ஆவின் நிறுவனம் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
தனியார் பால் நிறுவனங்கள் அனைத்தையும் நான் குற்றம் கூறவில்லை. பால் கலப்படத்தில் ஈடுபட்டவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவித்துள்ளேன். சட்டமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினால் பேசத் தயார்.
தனியார் பால் நிறுவனங்கள் மீது நான் குற்றம் கூறுவதாக சொல்வது, அவை பணத்திற்காக என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.