வடகிழக்கு பருவமழை இந்த வருடம் தாமதமாக தொடங்கியது. தாமதமாக தொடங்கினாலும் போதிய அளவுக்கு மழை பெய்யும் என்று மக்களும், விவசாயிகளும் பெரும்பாலும் எதிர்பார்த்தனர்.ஆனால் குறைந்தளவு மழை மட்டுமே பெய்தது.
கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தாமதமாக தொடங்கிய போதிலும் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்தது.
தென் மாவட்டங்களில் மழை மேகம் இருந்தும் ஈரப்பதம் இல்லாததால் கனமழை பெய்யவில்லை. மாறாக குறைந்தழுத்த தாழ்வுநிலை அந்தமான் அருகே உருவாகி அது தாழ்வு மண்டலமாக தீவிரம் அடைந்து, மியான்மர் வழியாக சென்றது.இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழக கடல் பகுதியில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துச்சென்றுவிட்டது.மேலும் கன்னியாகுமரி அருகே உருவான குறைந்தழுத்த தாழ்வுநிலை அரபிக்கடல் பகுதியில் நோக்கி நகர்ந்தது.
இருந்த போதிலும் கியாண்ட், நடா புயல்கள் வந்து மிரட்டினாலும், போதிய மழை பெய்யவில்லை, வர்தா புயல் கை கொடுக்கும் என நம்பிய போதிலும் அவை எதிர்பார்த்த மழை பெய்யவில்லை, இந்த முறை வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. வர்தா புயல் சென்னையை கடந்து சென்றதால் ஓரளவுக்கு சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை பெய்தது. கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நீடிப்பதால் வடகிழக்கு பருவமழை காலம் இன்னும் முடியவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தற்போது குமரி கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் தென் மாவட்டங்கள் மற்றும் வடகடரோல மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
