வரும் 21ம் தேதி முதல் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்!
தென் மாவட்டங்களில் 21ம் தேதி முதல் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்!
தென் கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுநாள் முதல் 2 நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தாமதமாகத்தான் தொடங்கியது. ஆனால் சராசரி அளவு மழை கூட இந்த வருடம் பெய்யவில்லை. அதனால் பல மாவட்டங்களில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் விவசாயப்பணிகள் தொடங்க இயலாமல் விவசாயிகள் பொிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்தமான் தெற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. அதன் நிலை குறித்தும், அது எந்த திசை நோக்கி செல்கிறது என்றும் வானிலை மைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக நாளை மறு நாள் முதல் 2 நாட்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இன்றும் நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலை தான் நிலவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.