IMD Chennai : வானிலை இயக்குனர் ‘திடீர்’ மாற்றம்..? கனமழையை கணிக்க தவறியது காரணமா..? என்ன நடந்தது ?
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போது புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக திடீரென கனமழை கொட்டியது. இதனால், மக்கள் அதிகளவு சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த திடீர் மழையை சென்னை வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணிக்க தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமித்ஷாவிற்கு, சென்னை வானிலை ஆய்வு மையத்தினை மேம்படுத்திட கோரி கடிதம் எழுதியிருந்தார் புவியரசன்.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக இருந்த புவியரசன் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இயக்குனராக இருந்த புவியரசன், செந்தாமரை கண்ணன் வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குனர் பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
புவியரசன் திடீர் மாற்றப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி சென்னையில் யாரும் எதிர்பாராதவிதமாக பேய் மழை கொட்டி தீர்த்தது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மிதந்தன. அன்று இரவும் மட்டும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த அப்போதைய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், ‛வானிலை நிலவரங்கள் துல்லியமாக கணித்து சொல்ல முடியாத நிலை சென்னையில் உள்ளது,' என்றார். இந்த சம்பவங்கள் நடந்த 17 நாட்களுக்குள் தற்போது புவியரசன் இயக்குனர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். வானிலை மைய கருவிகள் சரியில்லை என்று புகார் தெரிவித்து இருந்ததால்தான் புவியரசன் மாற்றப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துக்களை கூறி வருகின்றனர். வானிலை மைய இயக்குனர் மாற்றப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.