அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி பலி..! மின்சாரத்துறையின் அலட்சியத்தால் தொடர்கதையாகும் உயிர்ப்பலிகள்..!
அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயி பழனிவேல் உயிரிழந்துள்ளார். அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மேலும் ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டிருப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கனமழையால் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து சென்னை கொரட்டூரில் 2 சிறுமிகளும் திருவாரூர் மாவட்டம் மணலகரம் கிராமத்தில் விவசாயி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த உயிரிழப்புகளால் மின்சாரத்துறையின் அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் மின் பெட்டி சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.
மின்சாரத்துறையின் அலட்சியத்தால் இதற்கு மேலும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உறுதியளித்திருந்தார்.
ஆனால், அதன்பிறகும் விருதுநகர் மாவட்டம் ஓ.கோவில்பட்டியில் உள்ள அரசு தாய்சேய் நல மையத்தில் சேதமடைந்த சுவிட்சைத் தொட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சுவிட்ச் போர்டு சேதமடைந்திருந்ததை அதிகாரிகளும் ஊழியர்களும் கண்டுகொள்ளாமல் இருந்ததே சிறுவனின் உயிரிழப்புக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பழனிவேல் என்ற விவசாயி, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே உள்ள வளவம்பட்டியைச் சேர்ந்த பழனிவேல் என்ற விவசாயி, தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் பழனிவேல் மிதித்தால் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்கம்பியை மிதித்து ஏற்படும் தொடர் உயிரிழப்புகளால் அரசின் மீதும் மின்சாரத்துறையின் மீதும் மக்கள் அதிருப்தியிலும் ஆத்திரத்திலும் உள்ளனர்.