கடலூரில் உலக மன நல நாளன்று, மனநோய் மீது உள்ள மூட நம்பிக்கைகளை அகற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலக மனநல நாளையொட்டி மாவட்ட மனநல திட்டம் சார்பில் விழிப்புணர்வு பேரணி கடலூர் ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மனநல விழிப்புணர்வு குறித்த கையேட்டை பேரணியில் கலந்து கொண்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.

தொடர்ந்து பேரணி பாரதி சாலை, மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம், தலைமை தபால் நிலையம் வழியாக கடலூர் அரசு மருத்துவமனையை சென்றடைந்தது. பேரணியில் அரசு செவிலியர் பயிற்சி மாணவிகள், மன நல விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடியும், முழக்கங்களை எழுப்பியபடியும் சென்றனர்.

மனநோய் மீது உள்ள மூட நம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்களை அகற்றுவதற்காகவே இந்த பேரணி நடத்தப்படுவதாகவும், மாவட்ட மனநல திட்டம் சார்பில் கடைபிடிக்கப்படும் இந்த உலக மனநல வாரத்தில் வானொலியில் மனநோய் மற்றும் விழிப்புணர்வு குறித்த நேர்காணல் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி கூறினார்.

இந்த பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஜவகர்லால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹபிசா, மனநல திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி, மனநல மருத்துவர்கள் கலையரசி, செந்தில்குமரன், மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சண்முகம், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் மோனிகா நிர்மலாகுமாரி, உளவியல் நிபுணர் வெங்கடாசலம், ஓயாசிஸ் தொண்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.