தாக்க வந்தவர்கள் காயம்பட்டபோது காக்க முன்வந்த போராட்டக்காரர்கள்……..!இது தான் தூத்துக்குடி மக்களின் மனித நேயம்………………!
தூத்துக்குடியில் வைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில், அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், மக்கள் மத்தியில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைதி வழியில் போராட முயன்ற மக்கள் மீது போலீசாரை தாக்கினார்கள். அதனால் தான் துப்பாக்கி சூடு நடத்தினோம். என பழி சுமத்தியிருக்கிறது காவல் துறை. நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்ததையும் மீறி, தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த, 1000க்கும் அதிகமான மக்கள் அணி திரண்டு வந்தனர்.
அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்ற காவல் துறை, தொடர்ந்து நடத்திய துப்பாக்கி சூட்டில், போராட்டத்தில் பங்கு பெற்ற 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் பலர் காயமடைந்திருக்கின்றனர்.
இந்த சம்பவத்தின் போது காவலர்கள் சிலர் நிலமையை சமாளிக்க முடியாமல், சூழ்நிலையை கண்டு பயந்து, தப்பிப்பதற்காக ஒரு கடைக்குள் சென்று ஒளிந்திருக்கின்றனர். அவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
அப்போது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியவர்களை தடுத்து, போலீசாரை மீட்டு அனுப்பி வைத்தனர். அந்த போராட்டக்காரர்களை பார்த்து போலீசார் கையெடுத்து வணங்கி நன்றி தெரிவித்திருக்கின்றனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
போராட்டத்தின் போது காயமடைந்திருந்த காவலர் ஒருவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் போராட்டகாரர்கள் உதவியிருக்கின்றனர். மேலும் கலவரத்தில் சிக்கிக்கொண்ட பெண் போலீசாரை மீட்டு, அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தங்கள் வீடுகளுக்குள் அடைக்கலம் அளித்திருக்கின்றனர் தூத்துக்குடி மக்கள். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய போதும் கூட, அவர்களில் பாதிக்கப்பட்டோருக்கு சக மனிதனாக இருந்து உதவியிருக்கின்றனர் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள். தங்களுக்கு துன்பம் நேர்ந்த பொழுதிலும் சக மனிதர்களை மனிதர்களாக பாவித்து, இவர்கள் செய்திருக்கும் இந்த உதவி, தமிழக மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. இந்த சம்பவத்தின் மூலமே அறியலாம் இவர்கள் அறவழியில் மட்டுமே போராடினார்கள் என்பதை.