தர்ணா போராட்டத்தில் குதித்த சிம்பு..ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு..
மெரினா கடற்கரையில் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மீது போலீஸ் தடியட நடத்தியதற்கு நடிகர் சிம்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தனது வீட்டிலேயே தர்ணா போராடட்டத்தில் குதித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் திரைப்பட நடிகர் முதன்முதலாக குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், கடந்த வாரம் தனது வீட்டின் முன்பு கறுப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் முன்பு அமைதிப் போராட்டம் நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சிம்புவின் இந்த போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்தது. திரைப்பட இயக்குநர்கள் ராம்,வெங்கட் பிரபு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் விஷ்ணு. பிரேம்ஜி உள்ளிட்டோர் அன்று கறுப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது போலீசார் நேற்று தடியடி நடத்தியதற்கு நடிகர் சிம்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும் , பீட்டாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2 நாட்களாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நொடிக்கு நொடி ஏராளமான இளைஞர்கள் மெரினாவில் குவிந்து வருவதால் அப்பகுதி திக்குமுக்காடி வருகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.
.இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு சாலையின் ஒரு பக்கத்தில் நின்றிருந்தவர்களை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிம்பு, தடியடி மூலம் ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை அடக்கிவிட முடியாது என தெரிவித்தார்.
நீதி கிடைக்கும் வரை இளைஞர்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்த சிம்பு, தனது வீட்டிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த போராட்டத்தில் நடிகர்கள் விஜய் வசந்த், விஷ்ணு உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
