காதில் பூ வைத்துக் கொண்டும், மண்டை ஓட்டை சட்டையில் ஒட்டிக் கொண்டும் போராட்டம். ஏன்?
கடலூர்
கடலூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் காதில் பூ வைத்துக் கொண்டும், மண்டை ஓடு குறியீட்டை சட்டையில் ஒட்டிக் கொண்டும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
கடலூர் – நெல்லிக்குப்பம் பிரதான சாலை செம்மண்டலத்தில் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும்.
கடலூர் மாவட்டம், ஜவான்பவன் – கம்மியம்பேட்டை இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும்.
கடலூர் முதுநகர் மீன் சந்தை, இம்பீரியல் சாலை உழவர் சந்தை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களின் கோரிக்கை நிறைவேறிய பாடில்லை.
இதனால், கடந்த வாரம் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுருத்தி கடலூர் உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு அல்வாவுடன் சென்று மனு கொடுத்தனர். அதற்கும் நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதுவரை அதிகாரிகள் நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்தும் நேற்று கடலூர் பீச் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்றனர்.
அவர்கள் காதில் பூ வைத்துக் கொண்டும், அபாய மண்டை ஓடு குறியீட்டை சட்டையில் ஒட்டியும் நூதன போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவாஜிகணேசன், குருராமலிங்கம், சுப்புராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சையது முஸ்தபா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், நெடுஞ்சாலைத்துறை இளநிலை வரை தொழில் அலுவலர் எழில்அரசனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.