அங்கன்வாடி பணியாளர்கள் காலமுறை ஊதியம் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…
சிவகங்கை
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாக்கியமேரி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் வாசுகி, மாவட்டச் செயலாளர் ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “அனைத்து அங்கன்வாடி பணியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்,
ஓய்வூதியமாக ரூ.3500 வழங்க வேண்டும்,
நிவாரணத் தொகை 20 சதவீதம் வழங்க வேண்டும்,
பணிக் கொடையாக ரூ.5 இலட்சம் வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் உமாநாத், மாநில செயற்குழு உறுப்பினர் சித்ரா, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தாமரைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.