protest against rajini in poes garden

ரஜினி அரசியலுக்கு வருவதை கண்டித்து, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் அவரது உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். சென்னையின் மைய பகுதியான போயஸ் கார்டன் அருகே கத்தீட்ரல் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, அவர் விரைவில் அரசியலுக்கு வருவதாக பகிரங்கமாக தெரிவித்தார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்தாலும், பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்களில் நெட்டிசன்களின் காமான்ட்டுகள் பரபரப்பாகவே உள்ளது.

குறிப்பாக தமிழகத்துக்கு காவிரி பிரச்சனை, ஜல்லிக்கட்டு போராட்டம், இலங்கை பிரச்சனை, முல்லை பெரியாறு, விவசாயிகள் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தலையை காட்டாத ரஜினி, தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்குவதாக என சில அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.

இதையொட்டி, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை முற்றுகையிட போவதாக தகவல் வந்தது. இதையடுத்து, ரஜினி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர், ஒரு வேனில் ராதாகிருஷ்ணன் சாலையில் வந்து இறங்கினர். இதை பார்த்ததும் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதற்குள், செம்மொழி பூங்கா அருகில் இருந்து ஒரு கூட்டம் திபு திபுவென வந்தது. இதனால், போலீசார், அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், அதற்குள் ரஜினியின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர்.

வழக்கமாக உருவ பொம்மையில் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பார்கள். ஆனால், இன்று நடந்த சம்பவத்தில், உருவ பொம்மை மீது வெடிகளை வைத்து வெடிக்க செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, எரிக்கப்பட்ட உருவ பொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட வீரலட்சுமி உள்பட ஏராளமானேரை கைது செய்தனர்.

சென்னை நகரின் மைய பகுதி மற்றும் முக்கிய பகுதியான போயஸ் கார்டன் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.