ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட முயன்ற மாணவர்கள் கைது - மெரினாவில் பரபரப்பு
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னை மெரினாவில் திருவள்ளூர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்குத்தான் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனவும், இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் எனவும், கூறி இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு அரசியல் தரப்புகளும், இளைஞர்களும், சினிமா பிரபலங்களும் இந்த திட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து சென்னை மெரினா திருவள்ளுவர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட மாணவர்கள் முயற்சித்துள்ளனர்.
இதையறிந்த போலீசார் மீண்டும் தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி விடுமோ என பயந்து அனைத்து மாணவர்களையும் கைது செய்தனர்.
மேலும் மாணவர்கள், பொதுமக்கள் கூடாத வகையில், மெரினா கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.