வேலூரில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி
வேலூரில் தனியார் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்பாடி அடுத்த கோரந்தாங்கலில் தனியார் பள்ளி ஒன்று வகுப்பு விரிவாக்கத்திற்காக புதிய கட்டிடம் ஒன்றை கட்டி வந்தது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.இதற்கிடையே இன்று மாலை அக்கட்டிடச் சுவரின் ஒரு பகுதி சீட்டுக் கட்டு சரிவதைப் போல இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுவரை மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் உடல் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.இடிபாடுகளுக்குள் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.