மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனை; உடனே நடவடிக்கை எடுத்த மாநகராட்சி...
ஈரோடு
ஈரோட்டில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உடனே அதிரடி நடவடிக்கை எடுத்தது.
ஈரோட்டில் மாவட்டம், ஈரோடு மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதனைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, மாநகராட்சி உதவி ஆணையர்களுக்கு ஆணையர் சீனி அஜ்மல்கான் அறிவுறுத்தியிருந்தார்.
இதனடிப்படையில், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி தலைமையில், அலுவலர்கள் ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஈரோடு பெரியார் நகர் பகுதி வழியாக மாநகராட்சி ஆணையர் சீனிஅஜ்மல்கான் வாகனத்தில் நேற்று ரோந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததைப் பார்த்து, தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, நகர்நல அலுவலர் சுமதி சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தபோது, குப்பைத் தொட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையிலிருந்து கலக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், குப்பைத் தொட்டியில் கலக்கப்பட்ட மருத்துவக் கழிவுகளும் துப்புரவுத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டது.
"மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மக்களை பாதிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகளை கலப்பது தொடருமானால் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துச் சென்றனர்.