நாளை ராமேஸ்வரத்துக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்... 2 நாட்கள் தமிழகத்தில்!
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு நாளை வருகிறார். அவர் தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார்.
தில்லியிலிருந்து காலை 10.15க்கு இந்திய விமானப் படை தனி விமானத்தில் புறப்பட்டு மதுரை வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, மதுரை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப் படுகிறது. அதன் பின் ஹெலிகாப்டரில் காலை 11.25க்கு மண்டபம் செல்கிறார் ராம் நாத் கோவிந்த். அங்கிருந்து காரில் பகல் 12 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும் அவர், ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயிலில் ஸ்வாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர், பகல் 12.20க்கு அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்துக் கொண்டு, பகல் 1.25க்கு அப்துல் கலாம் நினைவிடத்துக்குச் சென்று, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறார். அதன் பின் அங்கிருந்து பிற்பகல் 2.20க்கு மண்டபத்திலிருந்து ஹெலிகாப்டரில் மதுரை புறப்படுகிறார் ராம்நாத் கோவிந்த்.
அன்று மாலை 3.30க்கு மதுரையிலிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படும் அவர்,
மாலை 4.35க்கு சென்னை பழைய விமான நிலையத்துக்கு வருகிறார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாலை 4.50க்கு கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் அவர், 5.45 க்கு கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் நிகழ்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
மாலை 6.35க்கு மீண்டும் ஆளுநர் மாளிகைக்கு வந்து அவர், இரவு அங்கே தங்குகிறாார்.
மறுநாள் ஞாயிறு காலை10 மணி வரை ஆளுநர் மாளிகையில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்துவிட்டு, காலை 10.15க்கு சென்னை பழைய விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் ஹைதரபாத் புறப்பட்டுச் செல்கிறார்.
சென்னையிலும் மதுரை மற்றும் ராமேஸ்வரத்திலும் குடியரசுத் தலைவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திலும் குறிப்பாக பழைய விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் போலீஸார் போடப்பட்டுள்ளனர்.