சென்னையில் பல இடங்களில் பவர் கட்! நிவாரணப் பணிகளுக்கு அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவு!
சென்னையில் பிற்பகல் 3 மணி முதல் மழை பெய்து வருவதை அடுத்து பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியது. இதனால், தாழ்வான பகுதிகளில் மின்சாரப் பெட்டிகள் இருக்கும் பகுதிகளில் விபத்து நேரிடாமல் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதை அடுத்து, தற்போது திருவல்லிக்கேனி பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னை அமைந்தகரை உள்பட, சென்னையின் பல பகுதிகளில் கடந்த 3 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப் பட்டு வருகின்றனர். மழையினால் வெள்ள நீரின் அளவு உயர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க 15 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மண்டல வாரியாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
மின் பகிர்மான பெட்டிகளை உயரத்தில் வைத்து பராமரிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.