இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது; சுழற்சி முறையில் வழங்கப்படும் என்று ஆட்சியர் அறிவிப்பு...
திருநெல்வேலி
திருநெல்வேலியில் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று முதல் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகின்றன என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தமிழகத்தில் வரும் 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
பொங்கல் பரிசு அடங்கிய தொகுப்பு அந்தந்த நியாயவிலைக் கடைகளில் சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது. மேலும், எந்தப் பகுதிக்கு எந்த தேதியில் விநியோகம் செய்யப்படும் என்ற விவரம் நியாயவிலைக் கடைகளில் ஒட்டப்பட்டிருக்கும்.
எனவே, மக்கள் எவ்வித சிரமமும் இன்றி பொங்கல் பரிசு சிறப்புத் தொகுப்பினை பெற்று பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இலவச பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் பகுதியில் இன்று தொடங்கி வைத்தார்.