பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதியவர்கள், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, வரும் 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு செய்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆசிரியர் தகுதி வாரியம் :

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18 ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. 

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டது. தற்போது விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள், பணி அனுபவச் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக கூடுதலாகப் பதிவேற்றம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு (11.03.2022 முதல் 18.03.2022 வரை) ஆவணங்கள் பெறப்பட்டு வருகின்றன. 

அவகாசம் நீட்டிப்பு :

இந்நிலையில் பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திட கூடுதல் கால அவகாசம் கோரி விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வருகின்றன. எனவே, விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளை ஏற்று ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால அவகாசம் 18.03.2022-லிருந்து 25.03.2022 ஆக நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது. 

மேலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. கோரிக்கைகளுக்கான உரிய பதில் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.