ஜெ.வுக்காக போலீஸ் வேலையை துறக்கும் வேல்முருகன் - கோவில் கட்டப்போவதாகவும் சபதம்
அதி தீவிரமான அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல அரசு அலுவலர்கள் பலரும் வெறித்தனமான விசுவாசத்துடன் இருப்பதுதான் ஜெயலலிதாவின் கூடுதல் பலங்களில் ஒன்று.
செல்வி ஜெயலலிதா மறைந்து நான்கு நாட்கள் கடந்து விட்ட நிலையில் சாரை சாரையாக மக்கள் கூட்டம் அவரது சமாதிக்கு அணிவகுக்க தொடங்கியுள்ளது.
குறிப்பாக பெண்கள் வருடக்கணக்கில் தாங்கள் ஆசை ஆசையாய் வளர்த்த கூந்தலை செல்வி ஜெ வுக்கு காணிக்கையாக அளிக்கின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதி தீவிர பக்தராக உள்ள போலீஸ்காரர் ஒருவர் தனது பதவியையும் ராஜினாமா செய்ய முன்வந்துள்ளார்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல்நிலையத்தில் காவலராக பணிபுரியும் வேல்முருகன் தான் இந்த போலீஸ்காரர்.
1989 முதல் 2001 வரை சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் காவலராக பணிபுரிந்துள்ளார் இந்த வேல்முருகன்.
அப்போது முதலே ஜெ மீது அளவு கடந்த பற்றும் பாசமும் ஏற்பட்டுள்ளது வேல்முருகனுக்கு.
எப்போதும் அம்மா புகழ் பாடி வந்த இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டபோது போலீஸ் உடையிலேயே மொட்டை அடித்து காணிக்கை செலுத்தி பரபரப்பை கிளப்பினார்.
தற்போது முதல்வர் ஜெ மறைந்ததை அடுத்து தான் பணிபுரியும் காவலர் பொறுப்பை ராஜினமா செய்யபோவதாகவும் ஜெயலலிதா இல்லாத வாழ்க்கை ஒரு வெற்று வாழ்க்கை என்றும் அதனால் பதவியை துறந்து விட்டு ஜெயலலிதாவிற்கென பிரத்யேக கோவில் ஒன்றை கட்டி அதில் வழிபட போவதாகவும் தெரிவித்துள்ளார்.
வேல்முருகனின் இந்த உருக்கமான செயல்பாடு அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது
நீண்ட தூரம் நீச்சலடித்தல் தலைகீழாக நடந்து செல்லுதல் போன்ற பல சாதனைகளை படைதுள்ளவர்தான் இந்த வேல்முருகன்.