"10 லட்சத்தில் 2 லட்சம் கொடுத்து விட்டு ஓடிவிடுங்கள்" – தொழிலதிபரை மிரட்டிய போலீஸ்காரர் சிக்கினார்
சென்னை பாரிமுனையில் தொழிலதிபரின் காரை போலியாக சோதனை நடத்தி, அவரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் பறிக்க முயன்ற போலீஸ்காரர், உயர் அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாத விவகாரம் காரணமாக பொதுமக்கள், தங்களிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை, கையில் வைத்து கொண்டு தடுமாறி வருகின்றனர்.
அதே வேளையில், வங்கிகளில் பணத்தை செலுத்தவும், தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை 20 மற்றும் 30 சதவீதத்துக்கு வெள்ளை பணமாக மாற்றி கொள்ள, கட்டுக்கட்டாக கார் மற்றும் பைக்கில் வைத்து கொண்டு சுற்றி வருகின்றனர். இதுபோல், நேற்று மன்தினம் சென்னை புரசைவாக்கத்தில், கருப்பு பணத்தை மாற்ற முயன்ற ஆடிட்டர் ஒருவரிடம், ரூ.10 லட்சத்தை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் சட்டத்தை காக்க வேண்டிய காவல் ஒருவர், பணம் பறிக்கும் நோக்கில் தொழிலதிபரை மிரட்டியதால், உயர் அதிகாரிகளின் விசாரைணையில் சிக்கியுள்ளார்.
சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்ப்பாவர் அறிவுச்செல்வன். நேற்று இரவு இவர், மண்ணடி செம்புதாஸ் தெருவில் காவல் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக ஒரு கார் வந்தது. அதில் வந்தவரிடம் விசாரித்தபோது, தொழிலதிபர் என தெரிந்தது.
இதையடுத்து அவரிடம் காருக்கான ஆவணங்களை ஆய்வுசெய்த அறிவுச்செல்வன், காரை சோதனையிட்டார். அப்போது, காருக்குள் ரூ.10 லட்சம் இருந்தது. இவ்வளவு பணம் எப்படி வந்தது என கேட்டபோது, தனக்கு சொந்தமான பணம், வீட்டுக்கு கொண்டு செல்வதாக அவர் கூறினார்.
அதற்கான ஆதாரத்தை கேட்டு, அறிவுச்செல்வன் மிரட்டியுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து, பணத்தை நான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தால், அவ்வளவு பணமும் பறிமுதல் செய்யப்படும். என்னுடைய மேல் அதிகாரியிடம் பேசிவிட்டேன். நீங்கள் ரூ.2 லட்சம் மட்டும் கொடுத்து விட்டு மீதி பணத்தை கொண்டு செல்லுங்கள் என மிரட்டியுள்ளார்.
இதனால், காரில் வந்த தொழிலதிபர், உடனடியாக இந்த சம்பவம் குறித்து, காவல்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு செல்போன் மூலம் விவரத்தை கூறியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரி, உடனே காவல்துறை மைக்கில் மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு, போலீஸ் வாகனத்தை அனுப்பி, அந்த காவலரை அள்ளி தூக்கி கொண்டு காவல் நிலையம் வரும்படி கட்டளையிட்டார்.
மைக்கில் வந்த உயர் அதிகாரியின் உத்தரவை கேட்டதும், பதறியடித்து கொண்டு வாகனத்தை எடுத்து கொண்டு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, காவலர் அறிவுச்செல்வனையும், தொழிலதிபரையும் காவல்நிலையம் கொண்டு வந்தனர். அங்கு நடந்த விசாரணைக்கு பின், தொழிலதிபர் அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், போலி வாகன சோதனை நடத்தி, தொழிலதிபரிடம் ரூ.2 லட்சம் பறிக்க முயன்ற காவலர் அறிவுச்செல்வனிடம், காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிரமக விசாரிக்கின்றனர்.