அன்புச்செழியனை பிடிக்கமுடியாமல் தனிப்படை போலீஸ் ஏமாற்றம்! சென்னை திரும்பினர்!
தலைமறைவாகியுள்ள சினிமா பைனான்சியர் அன்புசெழியன் பிடிக்க முடியாததால், ஐதராபாத் மற்றும் பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார் சென்னை திரும்பியுள்ளனர்.
சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நெல்லையில், கந்துவட்டி கொடுமை காரணமாக இசக்கிமுத்து என்பவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சினிமா இணை தயாரிப்ளர் அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அன்புச்செழியன் தலைமறைவானார். அவர் மீது நடிகர் சசிகுமார் உள்ளிட்ட பலர் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், தலைமறைவான அன்புச்செழியனைப் பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் தேடுல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அன்புச்செழியன் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. உதகையில் அன்புச்செழியன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்ற போலீசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதேபோல் மதுரையில் தகவல் கிடைத்து சென்ற போலீசாருக்கு ஏமாற்றமே கிட்டியது.
இதையடுத்து, ஐதராபாத், பெங்களூரு என தகவல் கிடைக்கும் இடத்துக்கெல்லம் தனிப்படை போலீசார் சென்றனர். ஆனாலும், போலீசாரால் அவரைப் பிடிக்க முடியவில்லை. அன்புச்செழியன் சிலருக்கு வில்லனாகத் தெரிந்தாலும், பலருக்கு அவர் கைகொடுத்து காப்பாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது. எனவே, திரைத்துறையினரைப் பொறுத்தவரை அவருக்கு ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். அது மட்டுமல்லாமல் அன்புசெழியன் தம்மை போலீஸ் நெருங்கவிடாமல் இருக்க செல்வாக்கை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்புச்செழியன் குறிது எந்த தகவலும் தனிப்படை போலீசாருக்கு கிடைக்காததால், அவர்கள் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியுள்ளனர்.