ரோகிணி திரையரங்கத்திற்கு ஒரு வாரம் தடையா? போலீஸ் திடீர் நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு
ரோகிணி திரையரங்கில் படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களை உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரோகிணி திரையரங்க நிர்வாகிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
படம் பார்க்க அனுமதி மறுப்பு
நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக் நடித்த 'பத்து தல' திரைப்படம் நேற்று (மார்ச் 30 ) தமிழகம் முழுவதும் வெளியானது. இந்தப் படம் பார்ப்பதற்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் இன மக்கள் தங்கள் குழந்தைகளோடு வந்துள்ளனர். அப்போது அவர்களை டிக்கெட் இருந்தும் உள்ளே செல்ல அனுமதிக்காமல் அவமதித்துள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது தொடர்பாக தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுவர்களோடு வந்ததால் படம் பார்க்க அனுமதிக்கவில்லயையென்றும் இதன் பின்னர் நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்பட்டதாக திரையரங்க நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் திடீர் நோட்டீஸ்
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் டிக்கெட் இருந்தும் ரோகிணி திரையரங்குக்குள் படம் பார்க்க அனுமதிக்காத டிக்கெட் பரிசோதகர்கள் ராமலிங்கம் மற்றும் குமரேசன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரோகிணி திரையரங்கில் பத்து தல திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி பெற்றுள்ளதா என்பதை விசாரிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் ரோகிணி திரையரங்கிற்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறப்படவில்லை என்பது உறுதியானால் ரோகிணி திரையரங்கிற்கு அபராதம் அல்லது ஒரு வாரகாலத்திற்கு திரையரங்கை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
இரண்டாவது நாளாக 3000ஐ கடந்த கொரோனா பாதிப்பு..! புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடும் மத்திய அரசு