பெண்ணிடம் இருந்து செயின், பணம் திருடிய போலீஸ் ஆய்வாளர், காவலர் சஸ்பெண்ட் - டிஐஜி அதிரடி...
கரூர்
மசாஸ் மையத்தில் நடத்திய சோதனையின்போது அதன் உரிமையாளார் பெண்ணிடம் இருந்து ஆறு சவரன் செயின், ரூ.1.25 இலட்சத்தை திருடிய கரூர் நகர உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி அதிரடி உத்தரவிட்டார்.
கரூர் நகர காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் கென்னடி. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கரூரில் உள்ள மசாஜ் மையத்தில் திடீரென ஆய்வு நடத்தினார்.
அப்போது அங்கிருந்த பெண் உரிமையாளரிடம் ஆறு சவரன் செயின், ரூ.1.25 இலட்சத்தை பறிமுதல் செய்துள்ளார். மேலும், அந்தச் சோதனையை காவல் நிலையத்தில் பதிவு செய்யாமல் பணத்தையும், நகையையும் அங்கு ஒப்படைக்காமலும் இருந்து காவல்துறைக்கே தண்ணிர் காட்டியுள்ளார்.
மறுநாள் மசாஸ் மையத்தின் பெண் உரிமையாளர் நகை, பணத்தைக் கேட்டபோது தர முடியாது என்றும் சொந்த பணத்தை தரமுடியாது என்று சொல்வதை போல கெத்தாக சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து அந்தப் பெண், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பவானி ஈஸ்வரியிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் நடந்த விசாரணையில், கென்னடி திருட்டுத்தனத்தில் ஈடுபட்டதும், காவல்துறைக்கே இழுக்கு ஏற்படுத்தியதும், அந்தப் பெண்ணிடம் இருந்து செயின், பணம் பறித்ததும் உண்மை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் கென்னடி, அவருக்கு உதவியாக இருந்த காவலர் முருகன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து நேற்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பவானி ஈஸ்வரி அதிரடி உத்தரவிட்டார்.