police family petition to CM
காவல்துறையில் வேலை பார்க்கும் காவலர்களுக்கு எவ்வித சலுகையும் இல்லை. அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித சலுகைகளும் வழங்கவில்லை என புகார் கூறி வந்தனர். இதையொட்டி, தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை கொடுக்க இருப்பதாக தகவல் பரவியது.
இதைதொடர்ந்து காவலர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தனி வாட்ஸ்அப் குழு அமைத்து அனைத்து பத்திரிகை, மீடியாக்களுக்கு இந்த தகவல்களை அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து இன்று காலை திருச்சி, தஞ்சை, மதுரை, திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீசார், சென்னை தலைமை செயலகம் முன் குடும்பத்துடன் திரண்டனர்.

போலீசாரின் குடும்பங்கள் அதிகளவில் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமை செயலகத்தின் எதிர் பகுதியில் அனைவரும் கூட்டமாக இருந்தனர். இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தலைமை செயலகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அவர்களை, கைது செய்ய முயன்றனர். அதற்குள், அங்கிருந்த பத்திரிகையாளர்கள், மீடிக்கள் காவலர் குடும்பத்தினரை முற்றுகையிட்டு பேட்டி எடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, காவலர் குடும்பத்தினர், தங்களது கோரிக்கைளை பத்திரிகையாளர் முன்னிலையில் அவர்கள் கூறினர். அதில் அவர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் சங்கம் இருக்கிறது. ஆனால், மக்களுக்கான இரவு பகல் பார்க்காமல் செயல்படும் போலீசாருக்கு சங்கம் என்பதே இல்லை. அனைத்து ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் 8 மணிநேரம் வேலை கொடுப்பதுபோல், போலீசாருக்கு கொடுப்பதில்லை.

அனைத்து துறையிலும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பணி வழங்கப்படுகிறது. ஆனால், போலீசார் குடும்பத்துக்கு பாரபட்சம் பார்ப்பது ஏன் என்பதை கேட்கிறோம். உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு பணம் அரசு சார்பில் பணம் கொடுக்கப்படுகிறது. இது அனைத்து துறைபோலவே உள்ளது. ஆனால், கருணை அடிப்படையில் வேலை வழங்கவில்லை என்பதே எங்கள் கோரிக்கையாக உள்ளது.
எங்களுக்கு புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதியத்தை ரத்து செய்யவேண்டும். பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கும சலுகைகளை போல எங்களுக்கும், சலுகைகளை வழங்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து போலீசார், அவர்கள் அனைவரையும் வேனில் ஏற்றி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்
