யார், யாருக்குத் தொடர்பு ? மேல் மட்டத்தின் பங்கு உள்ளதா ? பேராசிரியை நிர்மலாவிடம் கிடுக்கிப்பிடி….
மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடத் தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாவிடம் போலீசார் விடிய, விடிய கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செயல்பட்டு வரும் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருபவா் நிர்மலா தேவி. கடந்த சில நாட்களாக நிர்மலா தேவியின் பெயரில் ஆடியோ பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.
அதில் கல்லூரி மாணவிகள் சிலரிடம் பேசும் பேராசிரியை நிர்மலா, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சில அதிகாரிகள் உள்ளனா். அவா்களது விருப்பத்திற்க நீங்கள் சம்மதம் தெரிவித்தால் அவா்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்வார்கள். மேலும் மாதம் தோறும் உங்கள் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படும். இந்த விவகாரம் மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.
இந்த ஆடியோ வைரலாக பரவி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமாக மேல் மட்டத் தொடர்பை வெளிக் கொணர வேண்டும் என்று அரசியல் கட்சியினரும், பொது மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
அது தொடர்பாக விசாரணை 5 பேர் கொண்ட குழு ஒன்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லதுரை நியமித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று நிர்மலா வீட்டின் முன்பு மாணவர்கள். இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இநதிய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரவு போலீசார் நிர்மலா தேவியை கைது செய்தனர்.
இதையடுத்து அவரை திருச்சுழி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்றும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.