காவல்துறை கட்டுப்பாட்டில் காவேரி மருத்துவமனை; அலைக்கடல் என திரளும் திமுக தொண்டர்கள்! #KarunanidhiHealth
சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் கொட்டும் மழையிலும் நின்று முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்து வருகின்றனர். தொண்டர்களின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை காவேரி மருத்துவமனை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எல்டாம்ஸ் சாலையில் இருந்து மருத்துவமனை வரை உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள கடைகளையும் அடைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஒருவாரமாக திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை சரியில்லாமல் தீவிர வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
திடீரென நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள அரசியல் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் விசாரித்து சென்றனர். இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை குறித்து திடீர் ஒரு வதந்தி பரவியது.
இந்நிலையில் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்து மருத்துமனை முன்பு குவிந்து வருகின்றனர். ஆனால் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராகி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை தொண்டர்கள் மத்தியில் சிறிது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.