police chase and kills labour

திருப்பூரில் போலீஸ் துரத்தியதால் விபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் காவலர் செபஸ்டின் என்பவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கே.வி.ஆர்.நகரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனது நண்பர் சிலம்பரசனுடன் நேற்றிரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீரபாண்டிபிரிவை கடந்த போது அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களை வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். 

ஆனால் சுரேஷ் நிற்காமல் தப்பிச் செல்ல முயன்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவ்விருவரையும் துரத்திச் சென்றனர். கணபதிபாளையம் அடுத்த சென்னிமலைப்பாளையம் வளைவில் சென்று கொண்டிருந்த போது சுரேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த சாக்கடை கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சுரேஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த சிலம்பரசன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சூழலில் சுரேஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் நேற்றிரவு விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உமா, நிகழ்விடத்திற்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஆனால் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. இந்தச் சூழலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த செபஸ்டின் என்ற காவலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தவாக மாவட்ட எஸ்.பி.உமா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

வாகன தணிக்கையின் போது நிற்காமல் செல்பவர்களை போலீசார் விரட்டிச் செல்கையில், பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் தமிழகத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.