போலீஸ் சங்க நடவடிக்கை - 50 போலீசாரை கண்காணிக்க அதிகாரிகளுக்கு டிஜிபி கடிதம்
போலீஸ் சங்கம் அமைப்பது குறித்து சமூக வலை தளங்களில் பரவும் செய்தியால் புதிதாக நியமிக்கப்பட்ட 50 போலீசாரை தீவிரமாக கண்காணிக்க உளவுப்பிரிவு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி.,ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், போலீசார் சங்கம் அமைக்கப் போவதாக ,வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில்தகவல் பரவி வருவதால் காவல் துறையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இது தொடர்பாக சென்னையில், பல்வேறு அமைப்புகளின் பெயரில் உயர் போலீஸ் அதிகாரிகளே போஸ்டர்அடித்து ஒட்டியதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளதால் உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜுலை 6 ஆம் தேதி போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளதாகவும், அப்போது தங்கள் கோரிக்கைகள் குறித்து அவரிடம் விவாதிக்க உள்ளதாகவும் தகவ்ல பரவியுள்ளது.
இப்படி ஒரு சம்பவம் நடந்த விடக்கூடாது என்றும் இதை தடுக்க வேண்டும் என்றும் அனைத்து மாநகரபோலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், உளவுஅமைப்புகளின் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள்,மண்டல ஐ.ஜி.,க்கள், சரக டி.ஐ.ஜி.,க்களுக்கு டி.ஜி.பி.,ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட 50 கான்ஸ்டபிள்கள் உள்ளிட்ட சிலரை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் எங்கு செல்கிறார்கள், பணியின்போது யார், யாரை சந்திக்கிறார்கள் , பொது மக்கள் யாரையாவது சந்திக்கிறார்களா? போன்ற விவரங்களை சேகரிக்கவும் டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.