பேருந்தில் கஞ்சா கடத்திய கம்ப்யூட்டர் என்ஜினீயர், போட்டோகிராஃபர் கைது...
கன்னியாகுமரி
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள அரசு பேருந்தில் 4½ கிலோ கஞ்சா கடத்திய கம்ப்யூட்டர் என்ஜினீயர் மற்றும் போட்டோகிராஃபர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக பேருந்து, இரயில்கள் மூலம் கேரளாவுக்கு கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது.
இந்த கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக தமிழக - கேரள எல்லையில் கேரள மதுவிலக்கு காவலாளார்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பேருந்து ஒன்று சென்றது. இந்த பேருந்து தமிழக - கேரள எல்லையான அமரவிளை சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது, அங்கு பணியில் இருந்த கேரள மதுவிலக்கு காவலாளர்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, பேருந்தில் இருந்த இருவரின் பையில் 4½ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவலாளர்கள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை கடத்தியது திருவனந்தபுரம் காரியாவட்டம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (24), பாங்கப்பாறை பகுதியை சேர்ந்த கரீஷ் (21) என்பது தெரியவந்தது.
ராகுல் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கரீஷ் திருவனந்தபுரத்தில் புகைப்பட கலைஞராக உள்ளார். இதனையடுத்து காவலாளர்கள் இருவரையும் கைது செய்தனர்.