"மிஸ்டு கால் கொடுத்தால் தேடி வரும் சாராயம்" - வாணியம்பாடியில் புதுசா ஒரு மார்க்கெட்டிங் சிஸ்டம்!!
வேலூரை அடுத்த வாணியம்பாடி பகுதியில் மிஸ்டு கால் மூலம் சாராயம் விற்பனை செய்து வந்த சூர்யா, சுமதி தம்பதியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த ஊர். அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் உள்ள பல மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
இதையடுத்து அப்பகுதியில் போதிய அளவு டாஸ்மாக் கடைகள் இல்லாததால் குடிமகன்கள் மதுக்கடைகளை தேடித் தேடி குடித்து வருகின்றனர்.
குடிமகன்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு புது மாதிரியான மார்கெட்டிங் சிஸ்டத்தை உருவாக்கினர் சூர்யா மற்றும் சுமதி தம்பதியினர்.
அதன்படி சூர்யா மற்றும் சுமதி ஆகியோரின் செல்போனுக்கு முதலில் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் . இதைத் தொடர்ந்து மிஸ்டு கால் வந்த நம்பருக்கு அவர்கள் போன் செய்து, எங்கிருக்கிறீர்கள் ? எவ்வளவு சரக்கு வேண்டும் என கேட்டுத் தெரிந்து கொண்டு அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு நேரடியாக சென்று கள்ளச் சாராயத்தை சப்ளை செய்கின்றனர்.
இந்த வகை மார்க்கெட்டிங் கொஞ்ச நாளில் பிரபலமாகி சூர்யா, சுமதியின் கள்ளச்சாராய மார்க்கெட் சூடுபிடித்தது.
ஆனால் இவர்களை மடக்கிப் பிடிக்க திட்டமட்ட வாணியம்பாடி போலீசார், கஸ்டமர் போல் போன் செய்து சூர்யாவையும், சுமதியையும் கையும், களவுமாக பிடித்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.