வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று தமிழகத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை. தமிழகத்தில் ஓடும் மொத்த 15,335 பேருந்துகளில் சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுபோல் சென்னையில் 3,175ல் 318 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மொத்தம் தமிழகத்தில் பேருந்துகள் இயங்கவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனல பலரையும் பாதிக்கும் வகையில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருள்கள் மீதான விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், இன்று காலை 6 மணி முதல் மாா்ச் 30 ஆம் தேதி காலை 6 மணி வரை வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன. இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசியல் கட்சிகளும், கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன. இந்த பொது வேலை நிறுத்தம் காரணமாக இன்று பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால் பேருந்துப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் வேலை நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சென்னையில் ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்களை காவல்துறையினர் நேரில் சந்தித்து அறிவுறுத்தியுள்ளனர். பொதுமக்களிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களிடம் கேட்டுக் கொண்டதோடு, அதிக கட்டணம் வசூலித்ததாக பயணிகள் அளித்த புகாரின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.