“மாம்பழம் தான் வேண்டும்” அடம்பிடிக்கும் பாமக – சின்னம் ஒதுக்கப்படாததால் திருப்பரங்குன்றத்தில் வாபஸ்...!!!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைதேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக அக்டோபர் 26ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்த இடைதேர்தலில், திருப்பரங்குன்றம் தொகுதியில் பாமக சார்பில் வேட்பாளராக டி. செல்வம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவாவை, பாமக வேட்பாளர் செல்வம் சந்தித்துள்ளார். அப்போது தனக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்படவில்லை என கேள்விப்பட்டதாகவும், அதனால் தனது வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து பாமக வேட்பாளர் செல்வம், கட்சி தலைமையிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை புறக்கணிக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.