பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பா.ம.க-வினர் உண்ணாவிரத போராட்டம்...
தூத்துக்குடி
சீராக குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பா.ம.க-வினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாட்டாளி மக்கள் கட்சியினர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலாளர் லிங்கராஜ் தலைமை வகித்த இந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் "திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து பகுதிகளில் நாள்தோறும் சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
வீரபாண்டியன்பட்டினத்தில் காயல்பட்டினம் சாலை, அடைக்கலாபுரம் சாலை சந்திக்கும் இடத்தில் டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.
சிங்காரவேலன் தெரு நுழைவு வாயிலில் சரிந்தவாறு உள்ள வேப்ப மரத்தை அகற்ற வேண்டும்.
மேலும், அங்கு சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை சாலையோரமாக மாற்றி அமைக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
இதில், மாவட்ட தலைவர் ஆல்வின் ரொட்ரிகோ, துணை தலைவர்கள் கருப்பசாமி, மைதீன், துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய தலைவர் சிவலிங்கம், செயலாளர் பிரபாகரன், நகர தலைவர் முருகன், செயலாளர்கள் மாரியப்பன், விக்னேஷ் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.