பிரதமர் மோடி தமிழ்நாடு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் தரிசனம் செய்தார். தமிழர்களின் பாரம்பரிய உடையை அணிந்து வந்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியையும் பார்வையிட்டார்.

PM Modi's Darshan At Gangaikonda Cholapuram Temple: பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ளார். நேற்று இரவு தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்தார். இதன்பிறகு ரூ.4,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சி வந்த பிரதமர் மோடி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சோழ தேசத்தில் பிரதமர் மோடி

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை திருச்சியில் தான் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து விமான நிலையம் வரை ரோட் ஷோ நின்றார். வழிநெடுகிலும் இருபுறமும் இருந்த பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் காலடி பதித்த முதல் பிரதமரான மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்து கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயிலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். இங்கும் வழிநெடுகிலும் பிரதமருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி மக்களின் வரவேற்பை உற்சாகமாக ஏற்றுக் கொண்டார்.

கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் தரிசனம்

இதன்பின்பு கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அவருக்கு திருவாசகம் பாடி பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்குள்ள பிரகிதீஸ்வரர், துர்கா, பார்வதி மற்றும் முருகன் ஆகிய சன்னதிகளில் பிரதமர் மனமுருகி வழிபட்டார். பின்பு பிரதமர் மோடி கங்கையில் கொண்டு வந்த புனித நீர் மூலம் சோழீஸ்வரருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. அங்கு பிரதமர் தீபாராதணை காட்டி வழிபாடு நடத்தினார். ஓதுவர்கள் திருவாசகம் பாட 10 நிமிடங்களுக்கும் மேலாக கோயிலில் மனமுருகி பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

சோழர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் குறித்த கண்காட்சி

முன்னதாக, பிரதமர் மோடி கோலின் முக முக மண்டபம், மஹா மண்டபம் மற்றும் சிற்பங்களை வியந்து பார்வையிட்டார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மத்திய கலாசாரத்துறை சார்பில் சைவ சித்தாந்தம் சோழர்களின் கோயில்கள் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியில் சோழர் கால கல்வெட்டுகள், செப்பேடுகளின் பிரதிகள் மற்றும் சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை பிரதமர் மோடி ஆச்சரியத்துடன் பார்வையிட்டார். அந்த கல்வெட்டுகள், சிற்பங்கள் குறித்த தகவலை அதிகாரிகள் அவரிடம் விளக்கிக் கூறினார்கள்.