வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை...
ஈரோடு
ஈரோட்டில் சக மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்த பிளஸ்-1 மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர் அமராவதி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். லாரி ஓட்டுநர். இவருடைய மனைவி தாமரைசெல்வி. இவர்களுக்கு துசாந்த், நவநீதகிருஷ்ணன் (17) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இதில் துசாந்த் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நவநீதகிருஷ்ணன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
அவருடைய பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் மாணவர்கள் ஒரு சிலர் நவநீதகிருஷ்ணனை மிரட்டினார்களாம். இதனால் மனமுடைந்தார் நவநீதகிருஷ்ணன். இதனால், நேற்று நவநீதகிருஷ்ணன் பள்ளிக்கூடத்திற்கு செல்லவில்லை.
இந்த நிலையில் ராஜேந்திரகுமார் வேலை விஷயமாக ராஜஸ்தான் மாநிலம் சென்றுவிட்டார். தாமரைசெல்வி ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
துசாந்த் வழக்கம்போல கல்லூரிக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த நவநீதகிருஷ்ணன் மனவேதனையுடன் காணப்பட்டதால் தற்கொலை செய்து கொள்வதற்காக வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
சத்தம் கேட்டு ஓடோடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நவநீதகிருஷ்ணனை தூக்கில் இருந்து இறக்கி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து சித்தோடு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.