இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்டுத் தர வேண்டி முதல்வருக்கு மனு...
நாகப்பட்டினம்
புதுக்கோட்டையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களை மீட்டுத் தர வேண்டி முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம், நாட்டார், பஞ்சாயத்தார் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்தனர்.
அந்த மனுவில், "நாகப்பட்டினம், கீச்சாங்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சீ. விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப் படகில், மீன்பிடித் தொழிலாளர்கள் ரா.மதன் (24), த.ஆனந்தன் (48), கு.ராசக்கண்ணன் (52), ர.சந்தோஷ் (25) ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்திலிருந்து புதன்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடி படகையும் மீட்டுத் தர வேண்டும்" என்று அந்தக் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.