Periyapandi wife Banu Rekha Pressmeet

குடும்பத்தை விட வேலைதான் அவருக்கு முக்கியம்... தினசரி என்னை எழுப்பி விடுவார்... இன்று அவரிடம் இருந்து போன் வரவில்லை..., கணவருடன் நிறைய போலீசார் சென்றிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று உயிரிழந்த காவல் ஆய்வாளர் பெரியபாண்டியின் மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

சென்னை, கொளத்தூரில் நகை கடையில் நூதன முறையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ராஜஸ்தானில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது கொளத்தூர் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த மாதம் 16-ம் தேதி கொளத்தூர் புதிய லட்சுமிபுரத்தில் முகேஷ் குமார் என்பவரின் நகைக்கடையில் மேற்கூரையில் துளை போட்டு 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து ராஜமங்கலம் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர். ராஜஸ்தானை சேர்ந்த நாதுராம், தினேஷ் செளத்ரி உள்பட 3 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து தமிழக தனிப்படை ராஜாஸ்தானுக்கு
சென்றது.

கொள்ளைக்கு உதவி செய்ததாக நாதுராமின் தந்தை சென்னா ராம், உறவினர்கள் கேலா ராம், சங்கர் லால், தவ் ராம் ஆகியோரை கைது செய்து சென்னை கொண்டுவந்து விசாரணைக்கு பிறகு போலீசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் நாதுராம், தினேஷ் செளத்ரி ஆகியோரை பிடிக்க தனிப்படை தொடர்ந்து ராஜஸ்தானிலேயே முகாமிட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று அதிகாலை பதுங்கியிருந்த கொள்ளையர்களை, தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் துப்பாக்கி சண்டையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சென்னையில் உள்ள பெரியபாண்டியின் வீட்டுக்கு சென்னை, காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் சென்று ஆறுதல் கூறினார்.

இதன் பிறகு, பெரியபாண்டியின் மனைவி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது கணவர், தன்னுடன் தினசரி செல்போனில் பேசுவார். பயப்படாமல் இரு என்றும், தினசரி என்னை எழுப்பி விடுவார் என்றும் கூறினார்.

குடும்பத்தைவிட வேலைதான் அவருக்கு முக்கியம். குடும்பம் இரண்டாம்பட்சம்தான். தினசரி என்னை எழுப்பி விடுவார். இன்று அவரிடம் இருந்து போன் வரவில்லை என்பதால் நான் உறங்கிவிட்டேன். என் உறவினர்தான் டிவியில் செய்தியைப் பார்த்துவிட்டு போன் செய்தார். கணவருடன் நிறைய போலீசார் சென்றிருந்தால், இப்படி நடந்திருக்காது என்று பெரியபாண்டியின் மனைவி பானு ரேகா கூறி அழுதார்.

தன் குடும்பத்தோடு சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை என்று பெரியபாண்டி கூறியதாக அவரின் மகன் சொன்னது அனைவரின் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.