ஃபெப்சி வேலை நிறுத்தம் வாபஸ்...
ஃபெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முதல் படப்பிடிப்புகளில் தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் இடையேயான சம்பள பிரச்சனை காரணமாக திரைப்பட தொழிலாளர் அமைப்பான பெப்சி கடந்த ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தது.
ஃபெப்சி வேலை நிறுத்தம் காரணமாக, நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் காலா, விஜய்-ன் மெர்சல் என 60-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
ஃபெப்சி அமைப்பின் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த், சுமூகமான முறையில் பெப்சி அமைப்பும், தயாரிப்பாளர்களும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
ஃபெப்சி அமைப்பு இன்று மூன்றாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, சென்னை, வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாளை முதல் படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் கோரிக்கையை ஏற்று ஏகமனதாக ஃபெப்சி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அவர் கூறினார்.
நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கவிருந்த நிலையில் 3-வது நாளாக நடந்து வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக இயக்குநர் செல்வமணி கூறியுள்ளார்.
வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.