இராமேசுவரம் அரசு மருத்துவமனையில் நாய்கடிக்கு மருந்து இல்லாததால் பாதிக்கப்பட்ட மக்கள் கடும் அவதி...
இராமநாதபுரம்
இராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு விஷ முறிவு மருந்துகள் இல்லாததால் நாய்கடியால் பாதிக்கபட்ட மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதித் தமிழர் பேரவை வலியுறுத்தி உள்ளது.
இராமநாதபுரத்தில், ஆதித் தமிழர் பேரவை மாவட்டத் துணைத் தலைவர் உ.பூமிநாதன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "இராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு இராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் 700-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு நோய்களுக்காக சிகிச்சைப் பெற வருகின்றனர்.
இந்த நிலையில், அண்மை காலமாக பெண்கள், குழந்தைகள் தொடர்ந்து வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை இராமேசுவரமம் அரசு மருத்துவமனையில் மருந்து இல்லை என்பதால் 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதனால், ஏழை எளியோர் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமலும், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெற முடியாமலும் மிகவும் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் இராமேசுவரம் மருத்துவமனைக்கு அனைத்து நோய்களுக்கான மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.