மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் யாரும் வரி செலுத்தக் கூடாது - தண்டோரா போட்டு விவசாயிகள் போராட்டம்...
திருச்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் யாரும் வரி செலுத்தக் கூடாது என்று தண்டோரா போட்டு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு பொதுமக்கள் யாரும் வரி செலுத்தக்கூடாது என்று விவசாய சங்கத்தினர் தண்டோரா போட்டு நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத தமிழக அரசை கண்டித்தும் தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் சாவடித் திடலில் இருந்து நேற்று காலை தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வித்தியாசனமான போராட்டம் நடத்தினர்.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில் முருகானந்தம், கோவிந்தசாமி, சிவானந்தம், கண்ணன் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் யாரும் வரி செலுத்தக் கூடாது" என்று தண்டோரா போட்டு அதவத்தூரில் உள்ள முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
அப்போது அவர்கள், "மக்களை சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி காவிரி மேலாண்மை அமைக்கும் வரை மத்திய, மாநில அரசுகளுக்கு வீட்டு வரி, நில வரி, சொத்து வரி, தொழில் வரி, வருமான வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டாம்" என்று துண்டு பிரசுரங்கள் வழங்கி கேட்டுக் கொண்டனர்.