சாராயக் கடையை மூடச் சொன்னால் மூடமாட்டீர்களா? மக்கள் குரலுக்கு அடங்கிய அதிகாரிகள்..
சாராயக் கடையை மூடச் சொன்னால் மூடமாட்டீர்களா? என்று பொதுமக்கள் மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தினர்.
சாராயக் கடையை மூடச் சொன்னால் மூடமாட்டீர்களா? என்று பொதுமக்கள் மூன்றாவது முறையாக போராட்டம் நடத்தினர். இதில், அடங்கிய டாஸ்மாக் அதிகாரிகள் கடையை மூடிவிட்டு திரும்பிச் சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சந்தையில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று ஜூன் மாதம் 11-ஆம் தேதி திறக்கப்பட்டது. கடை திறப்பது குறித்து அறிந்தது முதலே இப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனையும் மீறி கடைத் திறக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர் வருவாய்த் துறை அதிகாரிகள். டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று உறுதியளித்தார். ஆனால்,கடை தொடர்ந்து நடந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஜூலை 23-ஆம் தேதி டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக மீண்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் போராட்டத்தால் செய்வதறியாது திகைத்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு ஓடினர். மக்கள் கொதிப்பு அடங்கி போயிருக்கும் என்று தப்புக் கணக்குப் போட்டு நேற்று மீண்டும் சாராயக் கடை திறக்கப்பட்டது.
ஆனால், சாராயக் கடை திறக்கப்பட்டது என்று அறிந்த அடுத்த சில நிமிடங்களிலேயே கடையின் முன்பு மக்கள் கூடினர். கடையைக் திறக்கக் கூடாது என்று கூறியும் மீண்டும், மீண்டும் கடையைத் திறக்கிறீர்களா? என்று உரத்தக் குரலில் பொதுமக்கள் முழக்கமிட்டனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள் ஆடிப்போனார்கள்.
சாராயக் கடையை மூடக்கோரி மூன்றாவது முறையாக மக்கள் போராடுகின்றனர் என்று தகவலறிந்த கும்மிடிப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, "டாஸ்மாக் சாராயக் கடை அகற்றப்படும். இனி திறக்கப்படாது" என்று கூறி கடையை மூடினர். அதன்பின்னரே சமாதானம் அடைந்த மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாராயக் கடையை மூட வலியுறுத்தி மூன்றாவது முறையாக பொதுமக்கள் போராட்டம் நடத்திய சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.