அடிப்படை வசதிகள் கேட்டு பொங்கி எழுந்த மக்கள்; நகராட்சி அலுவலகம் முற்றுகை…
தேனி
கூடலூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொங்கி எழுந்த மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் 13 வார்டுக்கு உட்பட்ட தம்மணம்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் மக்கள் மனுக்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கூடலூர் தெற்கு காவல் உதவி ஆய்வாளர் லாவண்யா மற்றும் காவலாளர்கள் விரைந்து வந்தார். பின்னர் நகராட்சி பொறியாளர் சிவக்குமார், காவலாளர்கள் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில் தம்மணம்பட்டி பகுதியில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கவும், தற்காலிகமாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவும் உத்தரவிடப்படும். மேலும் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்கு நிதி உதவி பெறுவதற்கு கோரப்பட்டுள்ளது. நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டதும் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரி கூறினார்.
இதனையேற்ற மக்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.